Welcome to Kaattaru!

It is my long desire to publish a book of my poems. But due to some reasons, I am still not able to do it. So I have decided to post it in this blog. In this First attempt I am posting about 50 Tamil poems written by me in the mid and late 90s. 
I am also open to any publisher request to publish my poems as a book

Friday, August 14, 2009

கானகம்

இவள்
வானம் வாங்கி வந்த வரத்தால்
பூமித்தாய் பெற்றெடுத்த புண்ணிய மகள் !
பிறந்த வீட்டைப் பெருமைப் படுத்த
மழை தட்சணை கொண்டுவரும் மங்கை !

சீறி வரும் சிங்கம் கூட
மங்கை இவள் மடியில் சரணடையும் !

பலம்கொண்ட யானைகளும், பவ்யமான மான்களும்
பழம்தின்னும் அணில்களும், அலங்கார மயில்களும்
கானக் குயில்களும் இவள் சொந்தம் !
உலகம் முழுவதற்க்கும் இவளோர் பந்தம் !

வண்ண வண்ண வாச மலர்கள் - இவள்
கூந்தலில் அமர்ந்து வாசம் வீசும் !

துள்ளிக் குதிக்கும் வெள்ளை அருவி - இவள்
கழுத்தில் தொங்கும் முத்து மாலை !

பாய்ந்து செல்லும் காட்டாறு இவள்
மேனியில் தவழும் வெண் பட்டாடை - இவள்
கால் வைத்து நிற்ப தெல்லாம்
பச்சைப் பசேல் பட்டுப்புல் கம்பளத்தில்தான் !

இத்துணை இனிமைகள் இவளிடம் இருந்தும் இவளின் நிலையோ அந்தோ பரிதாபம் தான்! வாரி வாரிக் கொடுத்தாலும் இவள் வாழ்வைக் கெடுக்கும் வஞ்சக ராகிவிட்டோம்! சோகம் இவள் சோகம் தீர்க்காவிடில் சாபம் நமக்கிடுவாள், சமாதிகள் ஆகிவிடுவோம் !!